67 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்த வை.எம்.எம்.ஏ பேரவைத் தலைமைக்கு கல்முனையில் பாராட்டு விழா.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
67 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவராக முதன் முதலாக தெரிவு செய்யப்பட்டு, பதவியேற்றிருப்பதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் கல்முனை அல்தாப் ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

வை.எம்.எம்.ஏ யின் அம்பாரை மாவட்டப் பணிப்பாளர் கே.எல்.சுபையிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் செயலாளர் ஸஷீட் எம்.றிஸ்மி, பேரவையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திட்டத்தவிசாளரும், பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகருமான எஸ்.தஸ்தக்கீர், பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான், பேரவையின் தலைமைத்துவமும்,பயிற்சியும், மற்றும் இளைஞர் வலுவூட்டல் திட்டத்தவிசாளர் யூ.எம்.பாஸீல் உள்ளிட்ட உயரதிகாரிகள், சமூக சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 67 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல், கிழக்கு மாகாணத் தலைமைக்கு உதவியாக இருந்து வரும் செயலாளர் ஸஷீட் எம்.றிஸ்மி, 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையாகச் சித்தியெய்திய பேரவையின் உறுப்பினர் சலீமின் புதல்வர்  முஹம்மட் பெறோஸ் ஆகியோர் அம்பாரை மாவட்ட வை.எம்.எம்.ஏ பேரவை உறுப்பினர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.நபீல் கருத்துத் தெரிவிக்கையில்:- 'நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவனாக இருந்திட்ட போதிலும் பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டவன். நான் என்றும் சமூக சேவையில் நிம்மதி காண்பவன். எந்தப் பிரதேசத்தவரானாலும் சரி, எந்த மதத்தவரானாலும் சரி கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவுவதே எனது பணி. எனது சேவைக்காலத்தில் என்னை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கேட்டுக் கொண்டார்.




Post a Comment

0 Comments