“ஆவா குழு என கூறப்படும் குழுவை அல்லது வேறு எந்த வன்முறை குழுவையும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்க அரசாங்கம் விடப்போவதில்லை” என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார்.
“இந்த வன்செயல் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ், அதன் முழு சக்தியையும் பிரயோகிக்கும்” என அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“ஆவாகுழு, அண்மையில் யாழ்ப்பாணத்தில் எட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தக் குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
“இந்தக் குழு தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக யாழப்பாண பொலிஸ் பிரிவில் சகல பொலிஸ் அதிகாரிகளனதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
“வெளிநாடுகளிலிருந்து கொண்டு இவ்வாறான ஆயுதக் குழுக்களை இயக்கிக்கொண்டிருக்கும் சூத்திரதாரிகள் பற்றிய முக்கிய விபரங்கள் ஏற்கெனவே கிடைத்துள்ளன” என அவர் கூறினார்.
இவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் அமைச்சர் கூறினார்.

0 Comments