.
(எம்.எம்.ஜபீர், எம்.எஸ்.எம்.சிஹாப்)
மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் இன்று நண்பகல்(25) இடம்பெற்ற மின்னல் தாக்குதல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய எம்.ஐ.தாஹிர் எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்துள்ளவர் மஜீட்புரத்தை சேர்ந்த எஸ்.எல்.இம்ஜாட் (வயது – 28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடயந்தலாவ வயல் பிரதேசத்திற்கு மேய்ச்சலுக்காக சென்ற கால்நடைகளை பார்த்துவிட்டு வயல்வெளி பிரதேசத்தின் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாகவும், அவருக்கு அருகில் நின்றவர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






0 Comments