உள்ளூர்த் துப்பாக்கிகளுடன் மூவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்


க.சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, உன்னிச்சைப் பிரதேசத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உன்னிச்சை குளத்துக்கருகில், நேற்று (27) மாலை, அம்பிளாந்துறையைச் சேர்ந்த குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீன்பிடி வலைகளும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பிரதேசத்தில் சிவில் உடையில் பதுங்கியிருந்த போது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள், அம்பிளாந்துறை - மாவடி முன்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த 35 - 45 வயதுகளையுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments