அம்பாரை மாவட்டத்தில் மக்களை ஏமாற்றும் தயிர் வியாபாரி

(எம்.எம்.ஜபீர்)
புனித ரமழான் மாதத்தில் சிறிய ரக டிப்பர் வாகனங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் தயிர் வியாபாரிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும்,  அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் ரமழான் மாதத்தில் சிறிய ரக டிப்பர் வாகனங்களில் விற்பனை செய்து வரும் தயிர் விற்பனையாளர்களின் தயிர்களை  பொது சுகாதார பரிசோதர்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறிய ரக டிப்பர் வாகனங்களில் விற்பனை செய்யும் தயிர் வியாபாரிகள் பழைய தயிர் சட்டிகளில் மேலுள்ள பாலாடைகளை நீக்கி  புதியதாக மாற்றி தயிர் இன்னும் உறையவில்லை இரவு சரியாக உறைந்துவிடும் என மக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருவது அம்பலமாகியுள்ளது.

 இவ்வாறான தயிர் விற்பனையாளர்கள் வீதி ஒரங்களில் சிறிய ரக டிப்பர் வாகனத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அத்துடன் தயிரின் விலையினை குறைத்து விற்பனை செய்வதனால் அதிகமான பிரயாணிகளும் பிரதேச மக்களும் வியாபாரிகளை நம்பி தயிரினை கொள்வனவு செய்து வீட்டிற்கு சென்று பார்க்கின்ற போது சாப்பிடுவதற்கு உகந்ததாக காணப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே புனித ரமழான் மாதத்தில் வீதி ஓரங்களிலும், சிறியரக டிப்பர் வாகனங்களில் வீடுவீடாக விற்பனை செய்யும் தயிர் வியாபாரிகளை பொது சுகாதார பரிசோதகள் நாளாந்தம் இவ்வாறான தயிர் வியாபாரிகளின் தயிர்களை பரிசோதனை உட்படுத்தி சட்டநடவடிக்கை மேற்கொள்ளவற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments