நெஸ்லே நிறுவனம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்ற பால்-மாவட்ட மாதிரித் திட்டம் பல்லாயிரக்கணக்கான சிறு அளவிலான பாற்பண்ணையாளர்களின் வாழ்வை மேம்படுத்த உதவி வருகின்றது
பாலுற்பத்தியின் மூலமாக நிலையான வாழ்வாதாரத்துடன் வருமானத்தை ஈட்டுகின்ற பாற்பண்ணையாளரான பண்டார மெனிக்கேவின் அனுபவப் பகிர்வு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும். உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள்.
எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை. பால் உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பாலின் தரம் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக, தனது பால்-மாவட்ட மாதிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்த தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1980 களில் அரசாங்கம் மற்றும் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் வேலைத்திட்டமொன்றை நெஸ்லே நிறுவனம் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட 20,000 பாற்பண்ணையாளர்களுக்கு வழக்கமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் நுண்கடன் உதவிகள், நடமாடும் கால்நடை சிகிச்சை மையங்கள், பால் கொள்கலன்கள் மற்றும் ஏனைய வளங்களை நிறுவனம் தற்போது வழங்கி வருகின்றது. பாற்பண்ணையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பாலை முறையாக சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் பால் சேகரிப்பு மையங்கள் மற்றும் பாலைக் குளிரூட்டிப் பேணும் மையங்கள் (பாலின் தரம் கெடாமல் பேணிப் பாதுகாப்பதற்கு) போன்ற அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதிலும் அது கணிசமான அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
உயர் தரம் கொண்ட உள்நாட்டுப் பாலைச் சேகரித்து, உயர் தரம் கொண்ட ஊட்டச்சத்துடனான உற்பத்திகள் பலவற்றை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நெஸ்லே நிறுவனத்தின் பணிகள் இடமளிப்பது மட்டுமன்றி, பண்டார மெனிக்கே போன்ற சிறு அளவிலான பாற்பண்ணையாளர்களுக்கு தமது வர்த்தக முயற்சிகளை வளர்த்து, தமது குடும்பங்களுக்கு உதவுவதற்கான வாழ்வாதாரத்தை வழங்கவும் இடமளிக்கின்றன.
நாட்டில் தொழில்வாய்ப்புக்கள் போதிய அளவில் காணப்படாத காலகட்டமாகிய 1980 களின் பிற்பகுதியில் தமது வாழ்வுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு மார்க்கமாக பண்டார மெனிக்கே மற்றும் அவரது கணவர் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்திருந்தனர். 'நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால், எனது கணவனால் எந்த இடத்திலும் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை,' என்று ரம்புக்கன நகரத்தின் புறநகரத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் வசித்து வருகின்ற பண்டார மெனிக்கே அவர்கள் குறிப்பிட்டார். 'ஆகவே நிலையான வருமானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நாம் இருவரும் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்தோம்,' என்று குறிப்பிட்டார். எனினும் 2005 ஆம் ஆண்டில் அவரது கணவருக்கு சுகவீனம் ஏற்பட்டமையால் அந்த வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒட்டுமொத்த பொறுப்பையும் மெனிக்கே அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில், கணவரின் உதவியின்றி பாற்பண்ணையை நிர்வகிப்பது அவருக்கு பலத்த சவாலாகவே காணப்பட்டது. பால் கறப்பது அவருக்கு பெரும் சவால்மிக்க ஒரு பணியாக காணப்பட்டது. 'குறிப்பாக ஏராளமான பசுக்கள் உள்ள போது கைகளால் பால்கறப்பது மிகவும் கடினமாக இருந்ததுடன், சோர்வை ஏற்படுத்துவதாகவும் காணப்பட்டது,' என்று அவர் குறிப்பிட்டார். 'அதன் பின்னர் நெஸ்லே நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்ததுடன், அந்நிறுவனத்தின் விவசாய-சேவை அலுவலர்கள் எவ்வாறு முறையாக பால் கறப்பது என்பது தொடர்பில் எனக்கு போதித்ததுடன், அதன் காரணமாக மிகச் சிறந்த தரம் கொண்ட பாலை உற்பத்தி செய்ய என்னால் முடிந்தது. புதிய தொழில்நுட்பம், சிறந்த கால்நடை பராமரிப்பு தொடர்பிலும் அவர்கள் எனக்கு போதித்ததுடன், இயந்திரங்களையும், எனது மேய்ச்சல் தரையை பாதுகாப்பதற்கு முட்கம்பியையும் கொள்வனவு செய்யவும் எனக்கு வட்டியில்லா கடன் உதவியை வழங்கினர். மேலும், 15 நாட்களுக்கு ஒரு தடவை எனக்கு வழக்கமான அடிப்படையில் கொடுப்பனவுகளை செலுத்தி வருவதால், அந்த வருமானத்திற்கான உத்தரவாதத்துடன் தேவைப்படும் போது வெளியில் கடனைப் பெற்றுக்கொள்ளவும் என்னால் முடிகின்றது,' என்று குறிப்பிட்டார்.
நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை வழங்குவதற்குப் புறம்பாக, நிலைபேற்றியலைப் பேணும் வகையில் பாற்பண்ணையை நிர்வகிப்பதற்கும் மெனிக்கே அவர்களை நெஸ்லே ஊக்குவித்து வருகின்றது. பசுக்களின் சாணத்தை அவர் தற்போது சேதன வாயுவாக மாற்றம் செய்து, தனது பாற்பண்ணைக்கும், வீட்டில் குடும்பத்திற்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றார்.
தற்போது நெஸ்லே நிறுவனத்திற்கு பாலை விநியோகிப்பதன் மூலமாக மாதம் ஒன்றுக்கு ரூபா 80,000 வருமானத்தை மெனிக்கே அவர்கள் ஈட்டி வருவதுடன், தான் கட்டியெழுப்பியுள்ள வியாபார முயற்சியை எண்ணி அவர் மிகவும் பெருமை கொள்கின்றார். பாற்பண்ணையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றமைக்காக நெஸ்லே நிறுவனத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளில் அவர்கள் ஏற்கனவே மூன்று ஜனாதிபதிகளையும், பல அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் மெனிக்கே அவர்கள் நேரடியாக சந்தித்துள்ளார். தரமான மற்றும் அதிகளவான பாலை உற்பத்தி செய்து வழங்குதல் மற்றும் அவரது பாற்பண்ணை மற்றும் கால்நடை நிர்வகிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் நாட்டிலுள்ள மிகச் சிறந்த 100 பாற்பண்ணையாளர்களுள் ஒருவராக நெஸ்லே நிறுவனம் அவருக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த இனங்காணல் அங்கீகாரங்கள் அவரது சமூகம் மற்றும் ஏனைய பாற்பண்ணையார்கள் மத்தியில் சமூகரீதியான அந்தஸ்தினை ஈட்டவும் மெனிக்கே அவர்களுக்கு உதவியுள்ளன.
'இந்த விருதுகளைப் பெற்றுள்ளமை எனக்கு மிகுந்த கௌரவமளிப்பதுடன், பெருமைகொள்ளச் செய்கின்றன. இன்று பாற்பண்ணையாளர்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்தையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். அனைவரும் ஒன்றுகூடி, பாராட்டு விருதுகளைப் பெற்றுக்கொள்கின்றமை பாற்பண்ணையாளர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியை அளிக்கின்றது. பாற்பண்ணையாளர்கள் என்ற வகையில் சிலசமயங்களில் மக்கள் எம்மை தாழ்த்தி எடைபோடும் நிலையில், இத்தகைய முன்னெடுப்புக்கள் எமக்கு தொழில் மதிப்பு அந்தஸ்தையும், பெருமையையும் சேர்ப்பிக்கின்றன,' என்று அவர் குறிப்பிட்டார்.
தனது பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க முடிந்துள்ளமையே அவர் மிகவும் பெருமைப்படும் ஒரு விடயமாகும். வியாபார முயற்சியை விரிவுபடுத்துவதற்கு பிள்ளைகள் தமது கல்வியை உபயோகிப்பர் என அவர் நம்புகின்றார். அவர் தற்போது அன்றாடம் 40 லீட்டர் பாலை உற்பத்தி செய்து வருவதுடன், தனது குடும்பத்திற்கு தேவையானதை எடுத்த பின்னர், தனது கிராமத்திலுள்ள சிலருக்கும் அவற்றை விற்பனை செய்து வருவதுடன், மேலதிகமாக உள்ள பாலை நெஸ்லே நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். எப்போதும் புதிய சவாலை ஏற்கக் காத்திருக்கும் அவர், அன்றாடம் 100 லீட்டர் பாலை உற்பத்தி செய்யும் அளவிற்கு தனது வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

'இது எனது பரம்பரைச் சொத்து,' என அவர் குறிப்பிட்டார். 'எனது வியாபாரத்தை இன்று இந்த அளவில் கட்டியெழுப்புவதற்கு நான் கடுமையாக உழைத்துள்ளதுடன், நான் முகங்கொடுத்த கஷ;டங்களை எனது பிள்ளைகளும் முகங்கொடுக்கத் தேவையில்லை. பாற்பண்ணையாளர்களுக்கு தற்போது நெஸ்லே போன்ற நிறுவனங்களிடமிருந்து ஏராளமான உதவிகளும், வியாபார முயற்சிகளுக்கான வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறுகின்றன. இந்த வியாபாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து, தமது கல்வியறிவை பயன்படுத்தி மேலும் விருத்தி செய்வதில் எனது பிள்ளைகள் ஈடுபட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
'பாற்பண்ணைத் தொழிலில் ஈடுபடுவது நாட்டிற்கு நாம் வழங்கும் ஒரு சேவையாகும்,' என்று அவர் குறிப்பிட்டார். 'உள்நாட்டில் அதிக தரம் கொண்ட பாலை இன்னும் அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டிய ஒரு வலுவான தேவை காணப்படுகின்றது. இதற்கு பங்களிப்பதன் மூலமாக நான் எனது தாய்நாட்டிற்கும் என்னால் முடிந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றேன்,' என்று தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments